பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

இறைவேதத்தையும் நபிவழியையும் 7313-7319

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7313
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
'(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்' எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுககு அருளப்பெற்றபோது 'உங்களுக்கு மேலிருந்தோ' என்பதைக் கேட்டவுடன் '(இறைவா!) உன் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். 'உங்கள் கால்களின் கீழிருந்தோ' என்பதைக் கேட்டவுடன் 'உன் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன்' என்றார்கள். 'அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து, உங்களில் சிலர் வேறு சிலர் தரும் துன்பத்தைச் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்' என்பதைக் கேட்டவுடன் '(பிரிப்பதும் துன்பத்தைச் சுவைக்கச் செய்வதுமான) இந்த இருவித வேதனைகளும் (முந்தைய வேதனைகளை விட) 'மிக எளிதானவை' அல்லது 'சுலபமானவை' என்றார்கள்.44

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7314
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, '(வெள்ளை நிறுத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்' என்றார். அதற்கு அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?' என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, 'ஆம்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள் 'அவற்றின் நிறம் என்ன?' என்று கேட்டார்கள். அவர், 'சிவப்பு' என்றார். 'அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அவர் '(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன' என்று பதிலளித்தார். '(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?' என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, 'ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், இறைத்தூதர் அவர்களே!' என்றார். நபி(ஸல்) அவர்கள் '(உன்னுடைய) இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக் கூடும்' என்று கூறி, அவன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.46

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7315
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'என் தாயார் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குள் அவர் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவர் சார்பாக ஹஜ் செய்' (எனக் கூறிவிட்டு) 'உன் தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை (அவர் சார்பாக) நிறைவேற்றுவாய் அல்லவா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (நிறைவேற்றுவேன்)' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் (நேர்ச்சையின் மூலம்) அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டியதை நிறைவேற்றுங்கள். ஏனெனில், வாக்கு நிறைவேற்றப்பட்ட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன்' என்றார்கள்.47

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7316
 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்; மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்கள் பிரச்சினைகளுக்கு) தீர்ப்பு வழங்கிக் கொண்டும், (பிறருக்கு) அதைக் கற்பித்துக் கொண்டும் இருத்தல்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.48

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7317
முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் மக்களிடம் ஒரு பெண்ணுக்குக் குறைப்ப பிரசவம் ஏற்படச் செய்வது குறித்து - அதாவது (கர்ப்பிணிப்) பெண்ணின் வயிற்றின் மீது அடித்து கருவைச் சிதைத்துக் குறைப் பிரசவம் ஏற்படுத்துவது குறித்து - கேட்டார்கள். அப்போது 'இ(ந்தக் குற்றத்திற்குப் பரிகாரம் என்ன என்ப)து தொடர்பாக உங்களில் யாரேனும் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் கேட்டுள்ளீர்களா?' என்று உமர்(ரலி) அவர்கள் வினவினார்கள். 'கேட்டிருக்கிறேன்' என்று நான் சொன்னேன். உமர்(ரலி) அவர்கள், 'அது என்ன?' என்று கேட்க, நான் 'நபி(ஸல்) அவர்கள், 'அந்த சிசுவுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிட வேண்டும்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்' என்று சொன்னேன். உடனே உமர்(ரலி) அவர்கள், 'நீங்கள் சொன்னதற்கு ஒரு சாட்சியைக் கொண்டுவராத வரை உங்கள் பொறுப்பிலிருந்து நீங்கள் விடுபடமுடியாது' என்றார்கள்.

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7318
உடனே நான் (சாட்சி கொண்டுவர) வெளியே சென்றேன். முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) அவர்களைக் கண்டு அவர்களை அழைத்துக்கொண்டு வந்தேன். அவர்கள் என்னுடன் சேர்ந்து 'இதற்கு இழப்பீடாக ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்க வேண்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறத் தாமும் கேட்டதாக சாட்சியம் அளித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.49

பாகம் 7, அத்தியாயம் 96, எண் 7319
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காத வரை மறுமைநாள் வராது' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக