பக்கங்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

நீதியும் நிர்வாகமும் 7214-7225


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7214ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பெண்களிடம் 'நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்; நற்செயலில் உங்களுக்கு மாறுசெய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்' எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்கமாட்டார்கள்.) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (-துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.77


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7215உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் (-பெண்கள்) உறுதிமொழி (பைஅத்) அளித்தோம். அப்போது அவர்கள் எங்களுக்கு இந்த (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். ஒப்பாரிவைக்கக் கூடாதென்று எங்களுக்குத் தடை விதித்தார்கள். அப்போது எங்களில் ஒரு பெண் (விசுவாசப் பிரமாணம் செய்யும் வகையில் சைகை செய்வதற்காக நீட்டிய) தன்னுடைய கையைப் பின்வாங்கிக் கொண்டு இன்ன பெண் எனக்கு (என் துக்கத்தில் உடனிருந்து ஒப்பாரிவைத்து) உதவினாள். எனவே, நான் அவளுக்குப் பிரதியுபகாரம் செய்ய (அவளுடன் சேர்ந்து ஒப்பாரிவைக்க) விரும்புகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அவள் சென்றுவிட்டுப் பிறகு திரும்பி வந்(து உறுதிமொழி அளித்)தாள். (ஒப்பாரி வைக்கமாட்டோம் என்று உறுதிமொழியளித்தவர்களில்) உம்முசுலைம், உம்முல் அலா ஆகியோரும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களின் துணைவியாரான 'பின்த் அபீ சப்ராவும்' அல்லது 'பின்த் அபீ சப்ராவும் முஆத்(ரலி) அவர்களின் துணைவியாரும்' தவிர வேறெவரும் தம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.78


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7216ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, '(இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தை என்னிடமிருந்து பெறுங்கள்' என்று கோரினார். நபி(ஸல்) அவர்களும் அவரிடம் இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தைப் பெற்றார்கள். பிறகு அவர் அடுத்த நாள் காய்ச்சலுடன் வந்து, '(என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை விடுவித்துவிடுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் (விடுவிக்க) மறுத்துவிட்டார்கள்.
அவர் திரும்பிச் சென்றபோது, 'மதீனா நகரம் கொல்லன் உலை போன்றதாகும்; அது தன்னிலுள்ள தீயவர்களை (சோதனைகளின் மூலம்) வெளியேற்றி நல்லவர்களைத் தூய்மைப்படுத்துகின்றது' என்றார்கள்.79


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7217காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்கள் தம் இறுதி நாள்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா(ரலி) அவர்கள், 'அந்தோ! என் தலை(வலி)யே!' என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்' என்றார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள், 'அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், (புன்னகைத்துவிட்டு), 'இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார் மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூ பக்ருக்கும் அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)' என்றார்கள்.80


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7218அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான்விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்)விட்டுச் சென்றிருக்கிறார்கள்' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை' என்று கூறினார்கள்.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7219அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறந்த நாளுக்கு மறுநாள் (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு பன} சாஇதா மண்டபத்தில் பிரமுகர்கள் வாக்களித்து 'பைஅத்' செய்த பிறகு பள்ளிவாசல் வந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தபடி உமர்(ரலி) அவர்கள் ஆற்றிய இரண்டாம் உரையை நான் செவியேற்றேன். உமர்(ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறினார்கள். (அப்போது) அபூ பக்ர்(ரலி) அவர்கள் ஏதும் பேசாமல் மெளனமாயிருந்தார்கள். உமர்(ரலி) கூறினார்: நமக்கெல்லாம் இறுதியாகத்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பார்கள்; அதுவரை உயிர் வாழ்வார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்; என்றாலும், மேலான அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஒர் ஒளியை அமைத்துள்ளான்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நேர்வழி காண்பித்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் மலைக்குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாமவருமான அபூ பக்ர்(ரலி) அவர்களே உங்களின் (ஆட்சியதிகார) விவகாரங்களுக்கு மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர்க ஆவார்கள். எனவே, அன்னாரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுங்கள்.
நபித்தோழர்களில் ஒரு சாரார் அதற்கு முன்பே பன} சாஇதா மண்டபத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டிருந்தார்கள். ஆனால், பொதுமக்களின் விசுவாசப் பிரமாணம் (இரண்டாம் நாள்) சொற்பொழிவு மேடையில் வைத்தே நடந்தது.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், 'அன்றைய தினம் உமர்(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், சொற்பொழிவு மேடையில் ஏறுங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்; இறுதியில், அபூ பக்ர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் ஏற, அவர்களுக்குப் பொதுமக்கள் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7220ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்தார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசினார். நபி(ஸல்) அவர்கள் மறுபடியும் தம்மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள், 'இறைத்தூதர் அவர்களே! சொல்லுங்கள். நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால்...? என்று -தான் வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற கருத்தில் - கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூ பக்ரிடம் செல்' என்று பதிலளித்தார்கள்.81


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7221தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.
(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்கள் 'புஸாகா' எனும் குலத்தாரின் தூதுக் குழுவிடம் 'உங்களை மன்னிப்பதற்கான காரணம் ஒன்றை இறைத்தூதரின் பிரதிநிதி(யான என)க்கும் முஹாஜிர்களுக்கும் அல்லாஹ் காட்டும் வரை நீங்கள் ஒட்டகங்களின் வால்களைப் பின்தொடர்ந்து (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருங்கள்' என்று கூறினார்கள்.82


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7222-7223ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்' என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், 'அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்' என்று (நபி(ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.83


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7224 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து கள்ளிகளாக உடைக்கும்படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக்கும்) மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. 84 என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் 'இஷா' தொழுகையில் கலந்து கொள்வார்.
முஹம்மத் இப்னு சுலைமான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'மிர்மாத்' என்பது ஆட்டின் குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சியைக் குறிக்கும். இது (வாய்பாட்டில்) 'மின்ஸாத்' மற்றும் 'மீளாத்' போன்றதாகும். இதிலுள்ள 'மீம்' எனும் எழுத்துக்கு 'இகர' அடையாளம் ('கஸர்') உண்டு.


பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7225கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எங்களுடன் பேச வேண்டாம் என்று முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள். இந்த நிலையிலேயே நாங்கள் ஐம்பது நாள்கள் இருந்தோம். பிறகு அல்லாஹ் நாள்கள் இருந்தோம். பிறகு அல்லாஹ் எங்களை மன்னித்த செய்தியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
கஅப் இப்னு மாலிக்(ரலி), அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள் இதை அறிவித்தார்கள். அன்னார் தாம் தம் தந்தை கஅப்(ரலி) அவர்கள் (முதுமையடைந்து) கண்பார்வை இழந்துவிட்டபோது அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் செல்பவர்களாக இருந்தார்கள்.85


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக